×

15 வயது சிறுமி பலாத்காரம்; ஓட்டல் தொழிலாளிக்கு 106 வருடம் கடுங்காவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணி ஆக்கிய ஓட்டல் தொழிலாளிக்கு 106 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேலக்கரை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (44). இடுக்கி மாவட்டம் அடிமாலியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்தார். அப்போது அதே ஓட்டலில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த பெண்ணுக்கு 15 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

பிரதீப் அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தநிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து உள்ளார். இதில் சிறுமி கர்ப்பிணி ஆனார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிறுமியை மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது இந்த விவரம் தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் அடிமாலி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தேவிகுளம் அதிவேக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிராஜுதீன் ஓட்டல் தொழிலாளி பிரதீப்புக்கு 106 வருடம் கடுங்காவல் தண்டனையும், ₹2.60 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால், அதிகபட்சமாக 22 வருடம் கடுங்காவல் தண்டனை அவருக்கு கிடைக்கும்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 22 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட உதவி மையம் மூலம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அடிமாலி மருத்துவமனையில் வைத்து சிறுமியின் கர்ப்பம் கலைக்கப்பட்டது.

The post 15 வயது சிறுமி பலாத்காரம்; ஓட்டல் தொழிலாளிக்கு 106 வருடம் கடுங்காவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Idukki ,Pradeep ,Selakarai ,Thrissur, Kerala ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...